Last Updated : 23 Nov, 2020 02:09 PM

 

Published : 23 Nov 2020 02:09 PM
Last Updated : 23 Nov 2020 02:09 PM

கேரள புதிய போலீஸ் சட்டம் நிறுத்திவைப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனத்தால் முதல்வர் பினராயி அறிவிப்பு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய போலீஸ் சட்டத்தை கேரள அரசு நிறுத்திவைத்துள்ளது.

முன்னதாக, சமூக வலைதளங்களில் மிரட்டல், திட்டுதல், அவமானப்படுத்துவது, அவதூறு பரப்புவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறை, அபராதம் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வகையில் கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு செய்தியாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், புதிய போலீஸ் சட்டம் அமலாவதை நிறுத்திவைப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "கேரள காவல்துறை அவசர சட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது.

சட்டத்திருத்தத்தை அறிவித்த நாள் முதலாகவே பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையான எதிர்ப்புகள் வருகின்றன. மார்க்சிஸ்ட் தலை மையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியின் ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ஆகையால் இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் இது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும். அனைத்துக் கட்சிகளின் கருத்தும் கேட்கப்பட்டு அதன்படி முடிவு எட்டப்படும்" என்று கூறியுள்ளார்.

சட்டம் உருவான பின்னணி..

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள புதிய போலீஸ் (திருத்தம்) சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்கினார். இதற்கு செய்தியாளர் சங்கங்கள், எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், "சமூக வலைதள அவதூறுகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் இதழியல் என்ற பெயரில் தனிநபர் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தனிநபரின் கண்ணியத்தை காப்பாற்றவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேரள போலீஸ் (திருத்தம்) சட்டத்தால் ஊடக செயல்பாடுகளுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது.

சட்டம் மற்றும் ஜனநாயக வரம்புக்கு உட்பட்டு கருத்துகளை பதிவு செய்யலாம். பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு என" முதல்வர் கூறியிருந்தார்.

ஆனாலும், பல தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல் வலுத்தது. நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை கேரள அரசு அமல்படுத்தாமல் நிறுத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x