தாத்ரி, கர்நாடகா சம்பவங்களுக்கு மாநில அரசுகளே பொறுப்பு: அமித் ஷா

தாத்ரி, கர்நாடகா சம்பவங்களுக்கு மாநில அரசுகளே பொறுப்பு: அமித் ஷா
Updated on
1 min read

தாத்ரியில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், கர்நாடகாவில் எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பாஜகவை குறைகூறாமல் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என அமித் ஷா கூறியுள்ளார்.

பிஹாரில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, "நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எழுத்தாளர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் தாத்ரி சம்பவம் நடந்தது உத்தரப்பிரதேச மாநிலத்தில். கல்புர்கி கொல்லப்பட்டது கர்நாடக மாநிலத்தில்.

இந்த இரண்டு சம்பவங்கள் நடந்த மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அப்படி இருக்க எல்லா சர்ச்சைகளுக்கும் பாஜகவை கைகாட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்" என்றார்.

"இடஒதுக்கீட்டு முறையை மறுபரீசீலனை செய்ய வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சில வாரங் களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமித்ஷா சற்று காட்டமாக "பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை கேட்பதற்கு முன்னர் ஊடகங்கள் பாஜக மீது கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க வேண்டும்" என்றார். பிஹார் தேர்தல், நிதிஷ் ஆட்சி தொடர்பான கேள்விகளை கேட்குமாறு அறிவுறுத்தினார்.

இடஒதுக்கீடை எதிர்க்கவில்லை:

பின்னர் சற்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய அமித்ஷா, "பாஜக தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முறையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. நாங்கள் எப்போதுமே அதை ஆதரிக்கிறோம். இப்போதைக்கு இடஒதுக்கீடு முறையை வேறு எந்த வித மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர விரும்புகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in