Published : 22 Nov 2020 09:41 PM
Last Updated : 22 Nov 2020 09:41 PM

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கிறார்கள்: குலாம் நபி ஆசாத் கடும் விமர்சனம்

காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால், முதலில் அவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர் என குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது.

அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து மூத்த தலைவர் கபில் சிபல் ஒரு ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம்தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக உள்ளன என்று நம்புகிறார்கள். இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பிஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

கபில்சிபலின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கபில் சிபலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:
‘‘காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. கட்சி தலைமை பதவிக்கு வேறு வேட்பாளர் யாரும் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது எதிர்ப்பு அல்ல. சீர்திருத்தங்களுக்காகவே இதனை கூறுகிறோம்.

கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத வகையில் கட்சியானது கீழ்நோக்கி சென்றுள்ளது. கடந்த இரண்டு ஆட்சி காலத்திலும், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை.

எங்களுடைய கட்சி தலைவர்களிடம் உள்ள பிரச்னை என்னவெனில், அவர்களுக்கு கட்சியிடம் இருந்து தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால், முதலில் அவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர். தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் இருந்து நடத்தப்படுவது இல்லை. அவர்கள் களத்திற்கு செல்வதில்லை. இந்த கலாசாரம் மாறும் வரை நாம் வெற்றி பெற போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x