Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க கேரள செய்தியாளர் சித்திக் முயற்சி: ஹாத்ரஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு விளக்கம்

உத்தரபிரதேசத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க கேரளசெய்தியாளர் சித்திக் முயற்சி செய்தார் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ்மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றகேரளாவை சேர்ந்த சித்திக் காப்பன் (41) கடந்த அக்டோபர்5-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே கேரள செய்தியாளர்கள் சங்கம் (கேயுடபிள்யூஜே) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரபிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் அலுவலக செயலாளராக சித்திக் காப்பன் உள்ளார். தேஜாஸ் என்ற பத்திரிகையின் நிருபர் என்ற போர்வையில் அவர் உத்தர பிரதேசத்தில்நுழைந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்தார். தேஜாஸ் பத்திரிகை கடந்த 2018-ம்ஆண்டே மூடப்பட்டுவிட்டது.சித்திக் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுவது பொய்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் சித்திக் தொடர்பில் உள்ளார். சிறையில் அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவதும் பொய். அவரை சந்திக்க சிறை நிர்வாகத்தை இதுவரை யாரும் அணுகவில்லை. சித்திக்கின் விருப்பத்தின் பேரில் கடந்த 2, 10, 17-ம் தேதிகளில் அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "சிறையில் சித்திக் காப்பனை சந்திக்க எவ்வித தடையும் இல்லை" என்று உறுதி அளித்தார்.

கேயுடபிள்யூஜே சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அந்த சங்கத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவர் அவகாசம் கோரினார்.

இதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஏற்றுக் கொண்டார். எனினும் தலைமை நீதிபதி கூறும்போது, "இந்த வழக்கு தொடர்பாககடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து எதிர்மறையாகசெய்திகள் வெளியிடப்பட்டது அதிருப்தி அளிக்கிறது. செய்திகளை உண்மைத்தன்மையோடு, நடுநிலையோடு வெளியிட வேண்டும்" என்று கண்டித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x