Last Updated : 21 Nov, 2020 03:15 AM

 

Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

டெல்லி காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுலுடன் கோவாவில் தங்குகிறார்

டெல்லி காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் சில நாட்கள் கோவாவில் தங்குகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (75) ஆஸ்துமா தொந்தரவு உள்ளது. இதன் காரணமாக அவர் கடந்த ஜுலை 30-ம் தேதி டெல்லியில் சர் கங்காராம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு அவர் ராகுலுடன் கோவா சென்று ஒரு வாரம் ஓய்வெடுத்தார்.

பிறகு செப்டம்பரில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு சென்று வந்தார்.அப்போதும் ராகுல் உடன் சென்றிருந்தார். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இருவராலும் பங்கேற்க முடிய வில்லை.

இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து விட்டதால் சோனியாவுக்கு மீண்டும் ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நெஞ்சுக்கு உள்ளேயும் சளி அதிகமாகி குறையாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் டெல்லிக்கு வெளியேசிறிது காலம் தங்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட சோனியா நேற்று தனி விமானத்தில் மகன் ராகுலுடன் கோவா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் கட்சிப் பணிகளையும் கவனிக்க உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சோனியாவுக்கு நெருக்கமான தலைவர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “சென்னை அல்லது கோவா செல்லும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.

இதில் தனக்கு பிடித்தஇடமான கோவா செல்ல சோனியாமுடிவு செய்தார். இவருடன் மகள் பிரியங்கா வத்ராவும் செல்வதாக இருந்தார். ஆனல் கடைசி நேரத்தில் முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்தனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது பனி மற்றும் குளிர் அதிகரித்துள்ளது. குளிர் காலத்தில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.

3 ஆலோசனை குழுக்கள்

இதனிடையே, பொருளாதாரம், வெளியுறவு, தேசப் பாதுகாப்பு ஆகிய 3 விவகாரங்கள் தொடர்பாக தனித்தனி குழுக்களை சோனியா காந்தி ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலா5 பேர் இக்குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் தனக்கு ஆலோசனை அளிக்கவும் சோனியா அறிவுறுத்தியுள்ளார். மூன்று குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார். பொருளாதார விவகாரக் குழுவில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x