Last Updated : 20 Nov, 2020 09:59 AM

 

Published : 20 Nov 2020 09:59 AM
Last Updated : 20 Nov 2020 09:59 AM

ஏப்., 2021-ல் சந்தைக்கு வருகிறது ஆக்ஸ்ஃபோர்டு கரோனா தடுப்பூசி: 2 டோஸ் விலை ரூ.1000- சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத் தலைவர் தகவல்

ஆக்ஸ்ஃபோர்ட் கோவிட்-19 தடுப்பூசியானது இந்தியாவில் வரும் பிப்ரவரி 2021-ல் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் கிடைக்கும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரலில் பொதுமக்களின் தேவைக்காக சந்தையில் விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

மேலும், 2 டோஸ் கொண்ட தடுப்பூசியின் விலை ரூ.1000 என்றளவில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று (வியாழன்) மாலை நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஆக்ஸ்ஃபோர்ட் கோவிட் 19 (Oxford-Astrazeneca) தடுப்பூசியானது வரும் பிப்ரவரி 2021-ல் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் கிடைக்கும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரலில் சந்தைக்கு பொதுமக்களின் தேவைக்காக விற்பனைக்கு வரும்.

2024-க்குள் இந்தியாவில் அனைவரும் கோவிட் 19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. 4 வருடங்கள் ஆகும் எனச் சொல்வதற்கு தடுப்பூசியின் விலை, கொள்முதல் நேரம், மக்களின் விருப்பம் ஆகியவையே காரணம்.

இந்தத் தடுப்பூசியின் விலை 5 முதல் 6 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000-க்கு விற்கப்படலாம்.

ஆக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி, வயதானவர்கள் மத்தியில் நல்ல பலனளிக்கிறது. அவார்களுக்குச் செலுத்தப்பட்டபோது டி-செல்கள் சிறப்பான முறையில் செயல்படுவது பலகட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. பெரிய அளவில் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இந்தியாவில் இந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுமையான பலனும் திறனும் இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும்.

அதார் பூனாவாலா

இந்தத் தடுப்பூசியை மக்களிடம் அவசரத் தேவை அடிப்படையில் பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு ஏஜென்சி அனுமதிக்கும்போது, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும். ஆனால், முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயது முதிர்ந்தோரின் பயன்பாட்டுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை கோவிட் 19, மற்ற வைரஸ் நோய்களுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. ஆகையால் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்துவதில் அவசரம் இல்லை. இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம்.

முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் கரோனா தடுப்பூசியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x