Last Updated : 19 Nov, 2020 08:39 AM

 

Published : 19 Nov 2020 08:39 AM
Last Updated : 19 Nov 2020 08:39 AM

டெல்லியில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவில் 131 பேர் உயிரிழப்பு: தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது: லாக்டவுன் கொண்டுவர கேஜ்ரிவால் திட்டம்


டெல்லியில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரையில்லாத வரையில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 131 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் மக்கள் நெருக்கமான பகுதிகளில் லாக்டவுனை அறிவிக்க அனுமதியளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் புதிதாக 7,486 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 131 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,943 ஆக அதிகரித்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று ஆகியவற்றால் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 62,232 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 12.03 சதவீதம் பாஸிட்டிவ் இருந்துள்ளது.

கடந்த 11-ம் தேதி அதிகபட்சமாக 85 பேர் உயிரிழந்தனர், 8,593 பேர் பாதிக்கப்பட்டனர். இப்போதுவரை இதுதான் ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாக இருந்து வருகிறது.

இதன் மூலம் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்து 5 லட்சத்து 3 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் எண்ணிக்கை 660 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் நெருக்கும் அதிகமாக இருக்கும் இடங்களான சந்தைப்பகுதிகள், மக்கள் கூடும் ஹாட்ஸ்பாட் மண்டலங்களில் லாக்டவுனைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டு துணை நிலைஆளுநருக்கு முதல்வர் அரவிந்த்கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், “ புதிதாக எந்தவிதமான லாக்டவுனும் டெல்லிக்கு தேவையில்லை. ஆனால், கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கலாம் இதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தபப்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தவிர டெல்லி அரசு நேற்று இரவு புதிதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில், “ டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு துணையாக 8 மணிநேரம் பணியாற்றினால் ரூ.1000 , 12 மணிநேரம் பணியாற்றினால் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தது.

துர்கா பூஜை, சாத்பூஜை, தீபாவளிப் பண்டிகை போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூடியது, அதிகரித்துவரும் காற்று மாசு ஆகியவற்றால்தான் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என்று டெல்லி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய நோய்தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், “ டெல்லியில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் கரோனாவில் விரைவில் பாதிக்கப்படுவார்கள். அதற்கு ஏற்றார்போல் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்துவரும் பனிக்காலத்தில் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். அதற்குதேவையான ஆக்ஸிஜன் சப்ளே, வென்டேலேட்டர் உதவிகளை தயாராக வைத்திருக்கும்படி” எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x