Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

ராணுவ வீரர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் லடாக்கில் நவீன குடியிருப்புகள் தயார்

லடாக்கில் கடும் குளிர், பனிப்பொழிவை தாங்கும் வகையில், நவீன வசதிகளுடன் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. படம்: பிடிஐ

புதுடெல்லி

லடாக்கில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு நவீன குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அவர்களை தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவரவர் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதன்படி, இந்திய வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குளிர்காலத்தில் லடாக்கில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அங்கு பல அடி உயரத்துக்கு பனி மூடிக் கிடக்கிறது. குளிர்காலத்தில் 30 அடி முதல் 40 அடி வரை கூட பனிப்பொழிவு இருக்கும். மிக உயரமான மலைப்பகுதி என்பதால், மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூட குளிர் நிலவும். கடும் பனியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது ஆண்டுதோறும் மிகவும் சவாலானதாக இருக்கிறது. இந்நிலையில், லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு நவீன குடியிருப்புகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் லடாக்கில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர கடும் குளிர், பனிப்பொழிவை தாங்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக நவீன குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் முடிந்து ராணுவ வீரர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் தயாராகி விட்டன.

இந்த குடியிருப்புகளில் மின்சார வசதி, தண்ணீர், வெப்ப நிலையை பராமரிக்கும் வசதியுடன் தூய்மையுடன் சுகாதாரத்தை காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகள் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். நமது ராணுவ வீரர்கள் எந்த சவாலையும் சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் எந்நேரமும் தயாராக உள்ளனர். அவர்களிடம் சிறிது கூட அலட்சிய போக்கு இருப்பதில்லை’’ என்றனர்.

சமீப காலமாக எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குறிப்பாக அதிக குளிரைத் தாங்கும் உடைகள் அமெரிக்காவில் இருந்து வாங்கி வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x