Last Updated : 17 Nov, 2020 02:23 PM

 

Published : 17 Nov 2020 02:23 PM
Last Updated : 17 Nov 2020 02:23 PM

உ.பி. போலானது பிஹார்: என்டிஏ ஆளும் அரசில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லை

பிஹாரில் 16 சதவிகித முஸ்லிம்கள் இருந்தும் ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒரு எம்எல்ஏ கூட அதில் இடம்பெறவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதன்முறையாக உருவாகி இருக்கும் நிலை, உத்திரப்பிரதேசத்தை போலாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.

பிஹாரின் மக்கள் தொகையில் அதிகமாக முஸ்லிம்கள் 17 மற்றும் யாதவர் 14 சதவிகிதம் உள்ளனர். இதனால், அதன் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்வியை அவர்களே நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.

இவர்களில், முஸ்லிம்கள் வாக்களித்த அரசியல் கட்சிகளால் இந்தமுறை வெற்றி பெற முடியவில்லை. மாறாக, முஸ்லிம்களின் வாக்குகளை அதிகம் பெறாத அரசியல் கட்சிகளின் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) வென்று ஆட்சி அமைத்துள்ளது. இங்கு என்டிஏவிற்கு தலைமை வகித்த ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார், நேற்று ஏழாவது முறையாக முதல்வராகி உள்ளார்.

என்டிஏவில் பாஜக, ஜேடியு, பிஹாரின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர்(ஹெச்ஏஎம்) மற்றும் விகாஷீல் இன்ஸான் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. இவற்றில் ஜேடியுவில் மட்டுமே 11 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் ஒருவர் கூட இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. பாஜக உள்ளிட்ட மற்ற மூன்று கட்சிகள் ஒரு முஸ்லிமிற்கும் போட்டியிடும் வாய்ப்பளிக்கவில்லை.

இதனால், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லாமல் பிஹாரில் ஆளும் அரசு அமைந்துள்ளது. என்டிஏவிற்கு கடும் போட்டியாக இருந்தது மெகா கூட்டணி.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமையில் இக்கூட்டணி போட்டியிட்டது. இக்கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்திருந்தன.

இக்கட்சிகளில் வென்றவர்களில் ஆர்ஜேடி 75 இல் 8, காங்கிரஸ் 19 இல் 4 மற்றும் இடதுசாரிகளில் 16 இல் ஒருவர் என முஸ்லிம்கள் வென்றுள்ளனர். மூன்றாவதாக அமைந்த இரண்டு கூட்டணிகளில் 6 முஸ்லிம்களுக்கு எம்எல்ஏவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒருவர் முஸ்லிமாக உள்ளார். இதன் தோழமை கட்சியான ஹைதராபாத் எம்.பி அசாசுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் 5 முஸ்லிம்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.

இந்நிலையில், அவர்களில் அதிக வேட்பாளர்கள் இடம்பெற்ற மெகா கூட்டணியின் தோல்விக்கும் முஸ்லிம்களே காரணமாகி விட்டனர். இதன் காரணமாக பிஹாரில் 24 என்றிருந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை வெறும் 19 ஆக குறைந்துள்ளது.

ஒவைஸி கட்சி மீதான புகார்

இந்தமுறை ஒவைஸி கட்சியின் வேட்பாளர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்ததாக புகார்கள் நிலவுகின்றன. ஒவைஸி கட்சியினர் 12 தொகுதிகளில் ஆர்ஜேடியின் வாக்குகளை பிரித்து தோல்வியுறச் செய்துள்ளனர்.

முஸ்லிம்களால் வாய்ப்பை இழந்த மெகா கூட்டணி

இதன் கூட்டணியான காங்கிரஸின் வாக்குகளையும் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 8 வேட்பாளர்கள் பிரித்துள்ளனர். இதனால், 15 தொகுதிகள் வித்தியாசத்தில் மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

கூடுதலாக 25 தொகுதிகள்

ஒவைஸியால் முஸ்லிம் வாக்குகள் பிரியாமல் இருந்திருந்தால், மெகா கூட்டணிக்கு சுமார் 25 தொகுதிகள் கூடுதலாக கிட்டி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதுபோன்ற நிலை முஸ்லிம்களுக்கு முதன்முறையாக உ.பி.யில் உருவானது.

ஒரு எம்ஏல்ஏவும் இல்லாத உ.பி.

இம்மாநிலத்தில் கடந்த 2017 இல் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த பாஜகவில் ஒருஎம்எல்ஏவும் இல்லை. இதன் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் சார்பில் ஒரு முஸ்லிமுக்கும் போட்டியிடும் வாய்ப்பை அளிக்கவில்லை.

உ.பி.யில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகள்

பிஹாரை விட அதிகமாக உ.பி.யில் முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 22 சதவிகிதம் உள்ளனர். உ.பி.யில் மக்களவையின் 80 இல் 34 மற்றும் சட்டப்பேரவையின் 403 இல் 130 தொகுதிகள் முஸ்லிம்களால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்துள்ளன.

உ.பி. அமைச்சர் மோசின் ராசா

பாஜக மீதான இப்புகாரை சமாளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உ.பி.யின் மேலவை உறுப்பினரான மோசின் ராசாவை அமைச்சராக்கினார். இதேபோல், மக்களவையின் 80 தொகுதிகளிலும் பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசிற்கு ஒரு முஸ்லிம் எம்.பியும் இல்லை.

வட மாநில அரசுகளின் நிலை

இதனால், மாநிலங்களவை சார்பில் தேர்வான முக்தார் அப்பாஸ் நக்வீ மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக அமர்த்தப்பட்டுள்ளார். வட மாநிலங்களில் பிஹாரில் இதுவரை அமைந்த அரசுகளில் முஸ்லிம்கள் அதிக முக்கிய இடம் பெற்றிருந்தனர்.

1970- இல் முதல்வராக அப்துல் கபூர்

இம்மாநிலத்தின் முதல்வராக 1970 இல் இருந்த அப்துல் கபூர், சமதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். இக்கட்சியின் தலைவராக சமூக புரட்சியாளராகக் கருதப்படும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பல ஆண்டுகளாக இருந்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள்

இவரது சமதா கட்சியின் இருந்து தான் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 1999 இல் பிரிந்து உருவானது. பிஹாரில் இதுவரை அமைந்த அரசுகளின் அமைச்சரவைகளிலும் முஸ்லிம்கள் அதிகமாக வகித்திருந்தனர்.

மேலவையில் எதிர்பார்ப்பு

இந்தவகையில், பிஹாரிலும் ஒரு முஸ்லிமை அமைச்சராக்கி அவரை மேலவைக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அம்மாநில முஸ்லிம்களிடம் உள்ளது. பிஹாரின் 39 மக்களவை தொகுதிகளில் மத்தியில் ஆளும் என்டிஏவிற்கு ஒரு முஸ்லிம் எம்.பி கூட இல்லாதது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x