Published : 17 Nov 2020 08:59 AM
Last Updated : 17 Nov 2020 08:59 AM

பிஹார் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை

பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று கூடி விவாதிக்கிறது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது.

அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து மூத்த தலைவர் கபில் சிபல் ஒரு ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம்தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக உள்ளன என்று நம்புகிறார்கள். இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பிஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

பொதுச் செயலாளர் தாரீக் அன்வர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். அடுத்துவரும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி குறித்து முழுமையாகத் தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் குறித்து கட்சித் தலைமை விரைவில் கூடி ஆலோசிக்கும்” எனத் தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம், சிந்திக்க வேண்டிய நேரம், ஆலோசிக்க வேண்டிய நேரம், செயல்பட வேண்டிய நேரம்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று கூடி விவாதிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள், பிஹார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x