Last Updated : 16 Nov, 2020 02:43 PM

 

Published : 16 Nov 2020 02:43 PM
Last Updated : 16 Nov 2020 02:43 PM

பிஹாரில் உதவாத கட்சிகளால் உதவாத அரசு; நிதிஷ் பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்போம்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிவிப்பு

பிஹாரில் உதவாத கட்சிகளால் உதவாத அரசு அமைந்துள்ளது. தேர்தலில் மக்களின் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக இருக்கிறது. நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்போம் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

பிஹாரில் நடந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் இன்று பிற்பகலில் 7-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கிறார். உடன் துணை முதல்வர்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருவர் பதவி ஏற்கின்றனர்.

ஆனால், தேர்தலில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக மகா கூட்டணியில் உருவாகிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவி்ல்லை.

இந்நிலையில் நிதிஷ் குமாரின் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தும் அவர்கள் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

''பிஹாரில் நடந்த தேர்தலில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால், அது மோசடி மூலம் மாற்றப்பட்டுவிட்டது. பொம்மலாட்ட அரசின் பதவியேற்பு விழாவை ஆர்ஜேடி கட்சி புறக்கணிக்கிறது.

வேலையில்லாத இளைஞர்கள், விவசாயிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் அனைவரிடமும் கேளுங்கள். மக்கள் என்டிஏ கூட்டணியின் மோசடி மீது கோபமாக இருக்கிறார்கள். நாங்கள் மக்களின் பிரதிநிதிகள், மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம்.

இந்த மாநிலத்தில் இரு உதவாத கட்சிகளால் உதவாத அரசாங்கம் அமைக்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்கப் போகிறவர் பலவீனமானவர், ஆக்கபூர்வமான சிந்தனையில்லாதவர், ஊழல்வாதி. என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜகவிடம் முதல்வர் வேட்பாளருக்குத் தகுதியான நபர் யாருமில்லை.

பெரும்பான்மையைப் பெற சந்தேகத்துக்குரிய முறையை நாடியுள்ளது. என்டிஏ உதவமுடியாதவர்கள். மக்களின் ஆதரவு ஆர்ஜேடிக்குதான் இருக்கிறது. பிஹாரின் புகழ்பெற்ற தலைவராக தேஜஸ்வி யாதவ் உருவாகியுள்ளார்''.

இவ்வாறு ஆர்ஜேடி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x