கரோனா; தொடர்ந்து 44-வது நாள்: தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா; தொடர்ந்து 44-வது நாள்: தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

நமது நாட்டில், கரோனா தொற்றிலிருந்து தினசரி குணமடைவோர் எண்ணிக்கை, தினசரி பாதிப்பை விட தொடர்ந்து 44 நாட்களாக அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 43,851 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆனால், புதிதாக 30,548 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 13,303 பேர் குறைந்து 4,65,478 ஆக உள்ளது.

தினசரி பாதிப்பு 30,548 ஆக உள்ளது, மிகக் குறைவான எண்ணிக்கையாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துகொண்டிருக்கும் நிலையில், நம்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் பரிசோதனையைத் தொடர்ந்து அதிகரிக்கும் அரசின் முயற்சிகள், புதிய தொற்று பாதிப்பை குறைத்துள்ளது. குணமடைவோர் வீதம் தற்போது 93.27%-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 82,49,579 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 435 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.85 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுடனும், யூனியன் பிரதேச அரசுகளுடனும், மத்திய அரசின் உயர்நிலைக் குழு தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in