Last Updated : 16 Nov, 2020 01:12 PM

 

Published : 16 Nov 2020 01:12 PM
Last Updated : 16 Nov 2020 01:12 PM

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு: வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் விலகல்

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் அமர்விலிருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றம் சாட்டி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு ஒரு புகார்க் கடிதத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதியிருந்தார்.

அதில், “சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி என்.வி. ரமணா செயல்படுகிறார். அமராவதியில் நில அபகரிப்பு முறைகேடு நடந்தது. அதில் நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. எனினும், அந்த வழக்கு விசாரணையை முடக்க, உயர் நீதிமன்றம் வாயிலாக ரமணா முயன்று வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி, வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் யாதவ், எஸ்.கே.சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி குற்றச்சாட்டு கூறிய ஜெகன்மோகன் ரெட்டியைப் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை உடனடியாக எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.


ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் தனது அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி, பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, தனது அரசியல் ஆதாயத்துக்காக நீதிபதி மீது கூறுகிறார்.

நீதிபதியின் மீது அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகள் கூறுவது என்பது மக்கள் மத்தியில் நீதித்துறையின் தோற்றத்தையும், மதிப்பையும் களங்கத்துக்கு உள்ளாக்கும்” எனத் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் வினீத் சரண், எஸ்.ரவிந்திரன் பாட் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி யு.யு.லலித் கூறுகையில், “இந்த வழக்கை விசாரணை செய்யும் அமர்விலிருந்து விலகிக்கொள்கிறேன். எனக்குப் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. இந்த வழக்கில் மனுதாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர் இருவரில் ஒருவருக்கு நான் வழக்கறிஞராக இருந்தபோது ஆஜராகி வாதாடியிருக்கிறேன்.

ஆதலால், நான் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காமல் வேறு அமர்வு உத்தரவிட அங்கு இந்த மனுவை அனுப்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x