இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர்  93 சதவீதமாக உயர்வு: நோய்த்தொற்று 88 லட்சத்தை நெருங்குகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 93 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 684 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87 லட்சத்து 73 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 81 லட்சத்து 63 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 714 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 520 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 40 லட்சத்து 31 ஆயிரத்து 230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 29 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in