Last Updated : 14 Nov, 2020 08:19 AM

 

Published : 14 Nov 2020 08:19 AM
Last Updated : 14 Nov 2020 08:19 AM

பாஜக மாநிலப் பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்; தமிழகத்துக்குப் புதிய பொறுப்பாளர்; உ.பி.க்கு முன்னாள் மத்திய அமைச்சர் நியமனம்: ஜே.பி.நட்டா உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்: கோப்புப் படம்.

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அதற்குத் தயாராகும் வகையில் மாநிலப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக துணைத் தலைவருமான ராதா மோகன் சிங்கை நியமித்து தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மாநிலப் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக கட்சியின் தேசியச் செயலாளர் சத்யகுமார், சுனில் ஓஜா, சஞ்சீவ் சவுராஷியா ஆகியோர் செயல்படுவார்கள்.

தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி : கோப்புப்படம்

மேற்கு வங்க மாநிலப் பொறுப்பாளராக கைலாஷ் விஜய் வர்கியா தொடர்கிறார். அவருக்கு உதவியாக பாஜக தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா ஆகியோர் செயல்படுவார்கள்.

பிஹார் மற்றும் குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராக பூபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக பாஜக தேசியச் செயலாளர்கள் ஹரிஸ் துவேதியும், பிஹார் மாநிலத்தில் துணையாக அனுபம் ஹசாராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, அசாம் மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக பாஜக தேசியதுணைத் தலைவர் பையாஜெயந்த் பண்டாவும், மகாராஷ்டிரா, கோவா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக பொதுச் செயலாளர் சி.டி.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். சி.டி.ரவி கர்நாடக மாநில கேபினட் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். சமீபத்தில் பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி மாநிலத்துக்குப் பொறுப்பாளராக இருந்துவந்த தருண் சவுக், தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவுக்குப் பொறுப்பாளராக இருந்து வந்த முன்னாள் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த அருண் சிங், கர்நாடக மாநிலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.புரந்தேஸ்வரி ஒடிசாவில் கட்சிப் பணியையும் பார்த்துக் கொள்வதோடு, சத்தீஸ்கர் மாநிலப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப், சண்டிகர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதமும், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்குப் பொறுப்பாளராக திலிப் சாகியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்துக்குப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக சுனில் தியோதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளருக்கு உதவியாக இருந்த கட்சியின் தேசியச் செயலாளர் சத்ய குமார், அந்தமான் நிகோபர் தீவுகளுக்குப் பொறுப்பாளராகவும், தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே ஹரியாணாவுக்குப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்குப் பொறுப்பாளராக அவினாஷ் ராய் கண்ணாவும், துணைப் பொறுப்பாளராக சஞ்சய் டாண்டனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பொதுச் செயலாளர்கள் பலர் பல்வேறு பிரிவுகளுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அமைப்புக்கு பூபேந்திர யாதவ், ஓபிசி பிரிவுக்கு அருண் சிங், இளைஞர் பிரிவுக்கு தருண் சவுக் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணிக்கு துஷ்யந்த் கவுதம், பட்டியலினத்தவர் பிரிவுக்கு சி.டி.ரவி, பழங்குடியினர் பிரிவுக்கு திலிப் சாகியா, சிறுபான்மையினர் அமைப்புக்கு டி.புரந்தேஸ்வரி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x