Last Updated : 13 Nov, 2020 06:16 PM

 

Published : 13 Nov 2020 06:16 PM
Last Updated : 13 Nov 2020 06:16 PM

எல்லையில் இந்தியா பதிலடி: பாக். ராணுவத்தினர் 8 பேர் பலி; ஏவுதளங்கள் அழிப்பு

காஷ்மீரில் பாக். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் | படம்: ஏஎன்ஐ.

பூஞ்ச்(காஷ்மீர்)

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடரும் போர்நிறுத்த மீறல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று மதியம் 1.15 போர்நிறுத்த மீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளர் வீரமரணம் அடைந்துள்ளார். இதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் கடுமையான பதிலடி தாக்குதலில் இந்தியா ஈடுபட்டது. இந்திய இராணுவம் நடத்திய பதிலடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

''பாகிஸ்தான் ராணுவம் இன்று பலமுறை போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மோட்டார் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் குண்டுகளை வீசினர். குரேஸ் செக்டரிலிருந்து ஜம்மு-காஷ்மீரின் யூரி செக்டர் வரை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர், பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் ஒரு ஜவான் காயமடைந்தார்.

தாக்குதலுக்குள்ளான பொதுமக்களில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பூஞ்ச் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா பதிலடி: பாக். ராணுவத்தினர் 8 பேர் பலி

கட்டுப்பாட்டு எல்லை முழுவதும் நடந்த போர்நிறுத்த மீறல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடி முறையில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பட்டியலில் மூன்று பேர் பாகிஸ்தான் ராணுவ சிறப்பு சேவைக் குழு (எஸ்.எஸ்.ஜி) கமாண்டோக்கள் ஆவர்.

இந்திய ராணுவத் துப்பாக்கிச் சூட்டில் 10-12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவப் பதுங்குக் குழிகள், எரிபொருள் கழிவுகள் மற்றும் ஏவுதளங்களும் அழிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x