Last Updated : 13 Nov, 2020 03:46 PM

 

Published : 13 Nov 2020 03:46 PM
Last Updated : 13 Nov 2020 03:46 PM

வரும் 16-ம் தேதி பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் 4-வது முறையாகப் பதவியேற்பு?

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்: கோப்புப் படம்.

பாட்னா

பிஹார் முதல்வராக, 4-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் வரும் 16-ம் தேதி பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 15-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஎம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். மறுநாள் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வராக நிதிஷ் குமார் பதவி ஏற்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

110 இடங்களில் காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி கைப்பற்றியது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நிதிஷ் குமார் இல்லத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடி நிதிஷ் குமாரைச் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

வரும் 15-ம் தேதி நிதிஷ் குமார் இல்லத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின் மறுநாள் 16-ம் தேதி நிதிஷ் குமார் 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், 16-ம் தேதி பையா தூஜ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாள் மிகவும் புனிதமான நாள் எனக் கருதப்படுவதால் அன்றைய தினமே நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி ஏற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. எப்போது பதவியேற்பு விழா நடக்கும் எனக் கூறவில்லை.

ஆனால், என்டிஏ கூட்டணியைப் பொறுத்தவரை நிதிஷ் குமார்தான் அடுத்த முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடியும் உறுதி செய்து, எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x