

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் 93 சதவீதத்தை நெருங்குகின்றனர். அதேசமயம், கரோனா தொற்று எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 879 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87 லட்சத்து 28 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 81 லட்சத்து 15 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 84 ஆயிரத்து 547 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 547 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 122 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 54 பேர், டெல்லியில் 104 பேர், தமிழகம், கேரளாவில் தலா 25 பேர், பஞ்சாப்பில் 23 பேர், கர்நாடகா, உத்தரப் பிரதேசத்தில் தலா 21 பேர், ஹரியாணாவில் 19 பேர், சத்தீஸ்கரில் 20 பேர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 31 லட்சத்து ஆயிரத்து 739 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 39 ஆயிரத்து 230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.