

கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் சிறுமி, ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி விலங்குகளின் விவரங்களை விவரித்து சமூகவலை தளத்தில் பதிவிட்ட வீடியோவை கண்டு ரசித்த பிரதமர் மோடி, சிறுமியின் அறிவுத் திறனை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்ஜுன். இவரது மகள் இந்திரா(9).
இந்திரா, நகரியப் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி 2-ல் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். கரோனா ஊரடங்கு காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், வீட்டிலிருந்த சிறுமி ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப வகையில் உள்ள ஆப் ஒன்றை பயன்படுத்தி வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் குறித்து விளக்கும்வீடியோவை உருவாக்கியுள்ளார்.
இந்த பதிவில், வீட்டின் அறையில் இருக்கும் இந்திராவின் அருகில் பசு, யானை, புலி, பாம்பு மற்றும் தேனீ போன்ற உயிரினங்கள் வருவதைப் போல ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் காட்டப்படுகிறது.
சிறுமி இந்திரா அந்த உயிரினங்கள் குறித்து ஆங்கில மொழியில் விளக்கிப் பேசுகிறார். இந்த வீடியோ பதிவை, பெற்றோர்களின் உதவியோடு சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்கண்ட வீடியோ பதிவை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடிபார்த்து ரசித்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவை உருவாக்கியுள்ள சிறுமியின் அறிவுத்திறனை பாராட்டி ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
கல்பாக்கம் சிறுமிக்கு பிரதமர்பாராட்டு தெரிவித்த தகவல், தற்போது இப்பகுதியில் பரவி வருகிறது. தகவல் அறிந்து இப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் சிறுமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.