Published : 12 Nov 2020 04:36 PM
Last Updated : 12 Nov 2020 04:36 PM

‘‘மக்கள் வாக்களித்தது மகா கூட்டணிக்கு; தேர்தல் ஆணையம் அறிவித்தது பாஜகவுக்கு’’- தேஜஸ்வி மீண்டும் புகார்

பாட்னா

மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் இன்று தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது

‘‘பிஹார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகா கூட்டணிக்கு ஆதரவாகவே பிஹார் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வெளி வந்துள்ளது. இது முதன்முறையல்ல. 2015-ம் ஆண்டு மகா கூட்டணி அமைக்கப்பட்டபோதும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடித்தது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x