Last Updated : 12 Nov, 2020 01:44 PM

 

Published : 12 Nov 2020 01:44 PM
Last Updated : 12 Nov 2020 01:44 PM

பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கு: அர்னாப் கோஸ்வாமிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி : கோப்புப் படம்.

மும்பை

மும்பை பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அவரின் மனைவி ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாஜக ஆட்சி மாநிலத்தில் நடந்ததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியது.

இதில் கடந்த 4-ம்தேதி லோவர் பரேலில் பகுதியில் உள்ள வீட்டில் அர்னாப் கோஸ்வாமி இருந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்ய முயன்றபோது, பெண் போலீஸார் ஒருவரை அர்னாப் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மீது பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸார் பதிவு செய்தனர்.

அர்னாப் கோஸ்வாமி மீது ஐபிசி 153 (அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்), 504 பிரிவு (உள்நோக்கத்துடன் புண்படுத்தி அமைதியைக் குலைத்தல்) 506 (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்ட நிலையில், பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் அவரைக் கைது செய்ய மும்பை போலீஸார் ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, தனது வழக்கறிஞர் பி.பி.ஜாதவ் மூலம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அர்னாப் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி இல்லாததால், மனுவை வரும் 23-ம் தேதி விசாரிக்கப் பட்டியலிடப்பட்டது.

இதுகுறித்து அர்னாப் கோஸ்வாமியின் வழக்கறிஞர் ஷியாம் கல்யாண்கர் கூறுகையில், “பெண் போலீஸாரைத் தாக்கியதாக போலீஸார் பதிவு செய்த வழக்கில் அர்னாப், அவரின் மனைவி ஆகியோருக்கு முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தோம். இன்று விசாரணைக்கு வந்தபோதிலும் நீதிபதி இல்லாததால், இந்த மனு வரும் 23-ம் தேதி விசாரிக்கப்படும் எனப் பட்டியலிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது. அந்த உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இந்த மனுவில் கைது செய்யத் தடை கோரி ஏதும் கூறவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x