Last Updated : 12 Nov, 2020 12:41 PM

 

Published : 12 Nov 2020 12:41 PM
Last Updated : 12 Nov 2020 12:41 PM

பிஹாரின் ராபீன் ஹுட் அனந்த்சிங்: சிறையில் இருந்தபோதும் 5-வது முறையாக வெற்றி

பிஹாரின் ‘ராபீன் ஹுட்’ என்றழைக்கப்படும் அனந்த் குமார் சிங் பல்வேறு குற்றச்செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சார்பில் போட்டியிட்டு ஐந்தாவது முறையாக வென்றுள்ளார்.

பிஹாரின் கிரிமினல் அரசியவால்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றவர் அனந்த் குமார் சிங். கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளால் பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், சிறையில் இருந்து அனுமதி பெற்று மொகாமா தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இது நிராகரிக்கப்ப்டும் என அஞ்சியவர், தன் மனைவியை சுயேச்சையாக அங்கு நிறுத்தி இருந்தார்.

சுயேச்சையாக இருந்தும் கணவர் அனந்த் குமார் சிங்கிற்காக மனைவி நீலம் பிரச்சாரம் செய்தார். இதில் அனந்த் குமார் சிங், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

ஏழைகளுக்கு நன்மைகள் செய்து ராபீன் ஹுட் எனப் பெயர் பெற்ற அனந்த் குமார் சிங் அங்கு தனி அரசாங்கத்தையே நடத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கை அன்று அனந்த் சிங் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் சுமார் பத்தாயிரம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டிருந்தது. இதை வைத்தே அவருக்காகத் தேர்தல் பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடலாம்.

பிஹாரில் முதல்வராக இருந்த ராப்ரி தேவியின் ஆர்ஜேடி ஆட்சியில், அனந்த் குமார் சிங் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரிடம் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

மொகாமாவில் அனந்த் குமார் சிங் சார்ந்த பூமியார் எனும் நிலச்சுவான்தாரர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இதன் அடுத்த எண்ணிக்கையில் ஏழைகள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அனந்த் சிங்கை அழைத்தால், தவறாமல் பரிசுத்தொகை கிடைக்கும். இதுபோன்ற காரணங்களால் அனந்த் குமார் சிங்கின் செல்வாக்கு மொகாமாவில் அதிகம் உள்ளது.

2005ஆம் ஆண்டில் ஜேடியுவில் இணைந்த அனந்த் குமார் சிங், நிதிஷ் குமாரின் சரிநிகர் எடைக்கான வெள்ளிக் காசுகளையும், இனிப்பு லட்டுகளையும் பரிசாக அளித்திருந்தார். இந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்த நிதிஷ், பிஹாரின் கிரிமினல்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அனந்த் சிங்கின் செல்வாக்கு காரணமாக அவரை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை.

2015-ல் ஜேடியுவில் இருந்து விலகிய அனந்த் குமார் சிங், கடந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை லாலுவின் ஆர்ஜேடியில் இணைந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x