Published : 11 Nov 2020 08:26 PM
Last Updated : 11 Nov 2020 08:26 PM

வேறு எந்த ஒரு நாடும் இந்த அளவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்க முடியாது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கட்சி அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

‘‘நாடுமுழுவதும் நடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக திட்டமிட்டு, செயலாற்றிய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் வாக்களித்ததற்காக மட்டும் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற கரோனா தொற்று சூழலில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். வேறு எந்த ஒரு நாடும் இந்த அளவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்குமா எனத் தெரியவில்லை.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x