Last Updated : 11 Nov, 2020 05:07 PM

 

Published : 11 Nov 2020 05:07 PM
Last Updated : 11 Nov 2020 05:07 PM

ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ஆபத்தான நிலையிலிருந்து சற்று மீண்டுள்ளார்: லக்னோ மருத்துவமனை தகவல்

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் ஆபத்தான நிலையிலிருந்து சற்றே மீண்டுள்ளார் என்று லக்னோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் (84), ஆன்மிகவாதி. இவர் 2019 நவம்பர் 9 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையைத் தொடங்குவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் தலைமையில் 15 அறங்காவலர்கள் கொண்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்படி ராமர் கோயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்டு மாதம் அயோத்தியில் நடந்த ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் மகந்த் நிர்த்தியா தாஸ் பங்கேற்றார். இந்நிகழ்வில் 175 விஐபிக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இவ்விழா நடைபெற்ற பிறகு மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புதுடெல்லி அருகே குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார்.

மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்கு மீண்டும் தற்போது உடல்நலம் குன்றியது. திங்களன்று, மூச்சுத்திணறல் காரணமாக ஸ்ரீராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மகந்த் நிலைமை மோசமாக உள்ளது என்று மேதாந்தா மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இன்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மருத்துவமனைக்குச் சென்று மகந்த் உடல் நலம் குறித்து விசாரித்தார். மவுரியா சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் கழித்தார்.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் கபூர் இன்று கூறியதாவது:

''ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிப்படைந்த நிலையில், எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோபால் தாஸுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்துவருகிறார்.

ஆனால், அனுமதிக்கும்போது இருந்த ஆபத்தான நிலையிலிருந்து சற்றே மீண்டுள்ளார். தற்போது அவர் வென்டிலேட்டரில் இல்லை. மேலும் மருத்துவ உபகரணங்களின் துணையோடும் அதிகம் இல்லை. எனினும் தேவைப்பட்டால் அவருக்கு மீண்டும் டயாலிசிஸ் செய்யப்படலாம்”.

இவ்வாறு ராகேஷ் கபூர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x