Published : 11 Nov 2020 02:58 PM
Last Updated : 11 Nov 2020 02:58 PM

நிதிஷ் குமாருக்கு இனி ஆதரவு இல்லை: மோடியை எப்போதும் ஆதரிப்பேன்: சிராக் பாஸ்வான் மீண்டும் திட்டவட்டம்

நிதிஷ் குமாருக்கு எனது ஆதரவு எப்போதுமே இல்லை, ஆனால் அதேசமயம் பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஆதரவளிப்போம் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். அந்த மாநில சட்டப்பேரவைக்கு அக்.28, நவ.3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது.

அதேபோல மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. இதுதவிர ராஷ்டிரிய லோக் சமதா, பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜனவாதி கட்சி, சுகல்தேவ் சமாஜ் கட்சி, ஜனதந்தரிக் ஆகிய கட்சிகள் இணைந்து மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் தனியாக போட்டியிட்டன.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.

மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 5, பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை கைப்பற்றியது.

பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது:

பிஹார் மக்கள் எங்களுக்கு அளப்பரிய அன்பை வழங்கியுள்ளனர். 25 லட்சம் வாக்காளர்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். தனித்து போட்டியிட்டு 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். மற்றவர்களின் ஆதரவுடன் கட்சி நடத்தும் சிலர் எங்களை விமர்சித்தனர். ஆனால் தனியாக போட்டியிட்டு எங்களை நாங்கள் நிருபித்துள்ளோம்.

நிதிஷ் குமார் மற்றும் சுஷில் குமார் மோடிக்கு எனது ஆதரவு எப்போதுமே இல்லை. எனவே மாநில அளவில் எனது ஆதரவு எப்போதுமே இல்லை. ஆனால் அதேசமயம் மத்தியில் பிரதமர் மோடிக்கு எப்போதுமே எங்கள் ஆதரவு உண்டு.

இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x