Last Updated : 11 Nov, 2020 11:47 AM

 

Published : 11 Nov 2020 11:47 AM
Last Updated : 11 Nov 2020 11:47 AM

கமல்நாத், திக்விஜய் சிங் இருவரும் மிகப்பெரிய துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம்

கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய இருவரும் மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய துரோகிகள் என ம.பி. இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நிரூபித்துள்ளனர் என்று ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு வரை நடந்தது. இதில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பாஜக மட்டுமே 18 இடங்களை வென்றுள்ளது. மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் ஒரு பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ளது,

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரை மிகப்பெரிய துரோகிகள் என்று மக்கள் கருதுவதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா, ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேருடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறி பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அவசியமானது.இது மத்தியப் பிரதேசத்தில் 15 மாத கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பின்னர், மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தனர்.

ஏற்கெனவே பதவியில் இருந்த எம்.எல்.ஏக்கள் இறந்ததால் மூன்று இடங்கள் காலியாக இருந்ததை அடுத்து 28 இடங்களுக்கு நவம்பர் 3 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது.

இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா பிடிஐயிடம் கூறியதாவது:

''இந்த வெற்றிக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்ந்த தலைமை, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முக்கியக் காரணம்.

அடுத்ததாக, ம.பி.யின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பாராட்டுக்குரியர்கள். மேலும், இந்த முடிவைச் சாத்தியமாக்க அனைவரும் ஒரே அணியாக நின்று பணியாற்றினர். அதேபோல தங்களது சொந்தத் தேர்தல் போலவே நிறைவாகவும் முழுமையாகவும் பணியாற்றிய ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இந்த வெற்றி செல்ல வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்து வெற்றியடைய வைத்ததற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு எனது நன்றி.

அனைவரும் ஒரே சிந்தனையுடன் ஒன்றிணைந்து செயல்படும் பாஜக போன்ற கட்சியில் பணியாற்றுவது எனது பாக்கியம் மற்றும் மரியாதை என்று நான் கருதுகிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) ஹேக் செய்து சேதப்படுத்தலாம் என்ற முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் பேசியிருக்கிறார். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் வேறு என்ன செய்ய முடியும். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மக்கள் உங்களைத் தொடர்ந்து ஒதுக்கி வைப்பார்கள், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.

இந்த உறுதியான வெற்றியைப் பற்றி கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரிடம் நான் சொல்ல விரும்புவது எதுவுமில்லை. ஏனெனில் இந்தத் தீர்ப்பின் மூலம் மத்தியப் பிரதேச மக்கள் அவர்களிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்திற்கு யாரேனும் துரோகிகள் இருந்தால், அவர்கள் திக்விஜய் சிங் கமல்நாத் ஆகிய இருவரும்தான் என மத்தியப் பிரதேச மக்கள் கருதுகின்றனர், இடைத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பில் இது மிகவும் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது வெளியே வாருங்கள் என மக்கள் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டனர்''.

இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x