

தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக உள்ள நடிகை விஜயசாந்தி, மீண்டும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம்உட்பட பல மொழி திரைப் படங்களில் துணிச்சல் மிக்ககதாபாத்திரங்களில் நடித்துபுகழ்பெற்றவர் விஜயசாந்தி. திடீரென இவர் ‘தல்லி தெலங்கானா’ எனும் அரசியில் கட்சியை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் இவரை, வீரமிக்க தெலங்கானா சகோதரி என அறிவித்தார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்ததால், டிஆர் எஸ் கட்சியிலிருந்து விஜயசாந்தி விலகினார்.
இதனிடையே, கடந்த தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், தெலங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரக் குழுவின் தலைவராக விஜயசாந்தி உள்ளார். இந்நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயசாந்தி சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து 2 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் விஜயசாந்தி சந்தித்தார். இதனால் இவர் பாஜகவில் இணைவது உறுதி என கூறப்படுகிறது.