Published : 09 Nov 2020 10:10 PM
Last Updated : 09 Nov 2020 10:10 PM

கரோனா பரவல்: 9 மாநில அமைச்சர்களுடன் ஹர்ஷ் வர்த்தன் ஆலோசனை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கோவிட்-19 தடுப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து 9 மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆந்திரப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஹரியாணா மற்றும் கேரளா‌ ஆகிய மாநிலங்களின் அமைச்சர்களும் செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இவற்றில் ஒரு சில மாநிலங்கள் அல்லது மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகரித்து, பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்து, மருத்துவமனையில் சேர்ந்த 24/48/72 மணி நேரத்திற்குள் உயிரிழப்பும் பதிவாகி வருகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடந்த ஜனவரி எட்டாம் தேதி கோவிட் தடுப்பு குறித்து நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு 11 மாதங்கள் கடந்து விட்டதை நினைவு கூர்ந்தார். “தசராவில் தொடங்கி வரவிருக்கும் தீபாவளி, சத் பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் அடுத்த வருடத்தில் மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் முழுவதும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குளிர் மாதங்களில் சுவாசத் தொற்று வேகமாகப் பரவக் கூடும் ”, என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, கர்நாடகம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலை நினைவுகூர்ந்த அவர், நோயின் தாக்கம் குறித்து பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகக் கூறினார்.

“கோவிட்-19 தடுப்பு முறைகள் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் பலமுறை உரையாற்றி இருக்கிறார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்களுடன் ஆலோசனைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அவர் அண்மையில் கொவிட் சரியான நடத்தைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இயக்கம் குறித்த முக்கிய தகவலை பரிமாறினார்”, என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், கொவிட் சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது தான் இந்த நோய்க்கு எதிரான சிறந்த ஆயுதம் என்றும், அதைக் கடைப்பிடிப்பது மிகவும் சுலபம் என்றும் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x