Published : 09 Nov 2020 07:32 PM
Last Updated : 09 Nov 2020 07:32 PM

பிஹார் தேர்தல்; பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் ஆபத்து: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் ஆபத்து உள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு 7-ம் தேதியும் நடைபெற்றது. 3-ம் கட்டத் தேர்தலில் 54.4 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலையொட்டி பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறி விட்டது. அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறியுள்ளது.

பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் அவாம் மோர்ச்சா போட்டியிடுகிறது. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து விட்டது.

அதேபோல் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளது.

தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சி, ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை 3-வது அணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிஹார் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. சில கணிப்புகளில் மொத்தமுள்ள 243 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி 150 இடங்கள் வரை வெற்றி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுகுறித்து பிஹார் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அவினாஷ் பாண்டே கூறியதாவது:

பிஹார் மாநிலம் நாட்டின் மிகுந்த வளம் கொண்ட மாநிலங்களில் ஒன்று. ஆனால் இந்த மாநிலத்தை முதல்வர் நிதிஷ் குமார் சீரழித்து விட்டார். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. இதனால் மக்கள் மெகா கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். ஆனால்
ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. பல மாநிலங்களில் இதுபோன்ற பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே இதுபோன்ற குதிரை பேரத்தை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்புடன் செயல்படவேண்டும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x