Last Updated : 09 Nov, 2020 06:44 PM

 

Published : 09 Nov 2020 06:44 PM
Last Updated : 09 Nov 2020 06:44 PM

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சைத் தொடங்க வேண்டும்; மத்திய அரசின் செயலால் தீவிரவாதத்தில் இளைஞர்கள் சேர்வது அதிகரிப்பு: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

பாகிஸ்தானுடன் நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். மாநில எல்லைப்புறச் சாலையை மீண்டும் திறந்து அமைதியை ஏற்படுத்தி, நீண்டகாலமாக நீடிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார்.

வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபின் முதல் முறையாக கடந்த இரு வாரங்களுக்கு முன் ஊடகங்களுக்கு மெகபூபா முப்தி பேட்டி அளித்தபோது, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி , சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால்தான் இந்திய தேசியக்கொடியை நான் பிடிப்பேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், ஜம்மு பகுதிக்கு 5 நாட்கள் பயணமாக மெகபூபா முப்தி சென்றிருந்தார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று புறப்படுகையில், மெகபூபா முப்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியாதாவது:

''ஜம்மு காஷ்மீர் பகுதியில் மீண்டும் தீவிரவாதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை எதிர்த்துப் பேசுபவர்களின் குரல்களை அடக்குவதால், வேறு வழியின்றி, ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

வெறுப்பு அரசியல், பிளவுபடுத்தும் அரசியல் மூலம் வெறுப்படைந்த சூழலை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. பாஜக ஆட்சியிலும் தீவிரவாதம் அதிகரித்துள்ளதால், காஷ்மீரில் வாழும் மக்கள் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

தீவிரவாதத்தை அழித்துவிட்டதாக பாஜக அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் ஒரு கிராமத்துக்கு 10 முதல் 15 இளைஞர்கள் தீவிரவாத அமைப்பில் சேர்கிறார்கள். பாஜகவால் தீவிரவாதம் காஷ்மீர் பகுதியில் வளர்ந்து வருகிறது. அனைவரின் குரல்களையும் ஒடுக்குவதால், மக்களுக்கு வேறு வழி தெரியாமல் தீவிரவாத அமைப்பில் சேர்கிறார்கள்.

இளைஞர்களுக்கு இரு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. சிறைக்குச் செல்வதா, தீவிரவாத அமைப்பில் சேர்ந்து துப்பாக்கியைத் தூக்குவதா? சிறைக்குச் செல்வதைவிட தீவிரவாதத்தில் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிச் செல்கிறார்கள்.

அத்துமீறி பாகிஸ்தான் எல்லைப்புறக் கிராமங்களை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீசுவதாலும், துப்பாக்கியால் சுடுவதாலும் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கிச் சூடு, அப்பாவி மக்கள் உயிரிழப்பால் அமைதியற்ற சூழல் நிலவும்போது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அறிவுரையைத்தான் பின்பற்ற வேண்டும்.

கார்கில் போர், நாடாளுமன்றத் தாக்குதல் நடந்தபோதிலும் கூட, பாகிஸ்தானுடன் நட்புறவோடு வாஜ்பாய் இருந்தார். இதன் காரணமாகவே தீவிரவாதச் செயல் குறைந்து, எல்லையில் துப்பாக்கிச் சத்தம் கேட்பது குறைந்தது.

வாஜ்பாய் காட்டிய அறிவுரைப் புத்தகத்தில் இருந்து குறிப்பெடுத்து, பாகிஸ்தானுடன் மீண்டும் மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும்.

நம்முடைய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டபின், சீனாவுடன் 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்களுக்கு எதிராக நாம் விரல் நீட்டிப் பேசவில்லை. நம்முடைய நிலப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கேட்டு நாம் சீனாவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், அவர்களோ 100 சதுர கி.மீ. நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். ஏன் இரட்டை நிலைப்பாட்டுடன் மத்திய அரசு இருக்கிறது. வாஜ்பாயின் கொள்கைப் புத்தகத்தை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் இரு பகுதிகளும் நம்முடையதுதான். எல்லைப் புறச் சாலைகளைத் திறந்து இரு பிரிவுகளாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியை ஒன்று சேர்க்கவேண்டும். நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு அமைதி திரும்ப வேண்டும்.

இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு ஜம்மு காஷ்மீர் அமைதி, நட்புறவை ஏற்படுத்தும் பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்''.

இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x