Published : 09 Nov 2020 03:53 PM
Last Updated : 09 Nov 2020 03:53 PM

மீண்டும் தாய்நாட்டை நோக்கி ஈர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம்: ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தல்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மீண்டும் தாய்நாட்டை நோக்கி ஈர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு கொள்கை(எஸ்டிஐபி)-2020-க்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் வழிகள் குறித்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகளுடன், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

தற்போதைய கோவிட்-19 நெருக்கடி சூழல் இந்தியாவையும், உலகத்தையும் மாற்றியமைத்துள்ளதால், இந்த எஸ்டிஐபி கொள்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் எஸ்டிஐபி 2020 உருவாக்கத்தில் முக்கிய யோசனைகளை உருவாக்குவதையும், ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொள்கை உருவாக்கத்தில், வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்குதாரராக இருந்து தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவை, எஸ்டிஐ கொள்கையில் சேர்க்கப்படும். திறமையான வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மீண்டும் தாய்நாட்டை நோக்கி ஈர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம். இதே நோக்கில்தான், ‘வைபவ்’மற்றும் ‘பிரபாஸ்’ கூட்டங்களையும் மத்திய அரசு நடத்தியது.

உலகளவிலும், தேசிய அளவிலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்திய விஞ்ஞானிகள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப தொழில் வளர்ச்சிக்கும், வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்து, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் முன்னணி நாடாக இந்தியா உருவாகியுள்ளது. நாட்டின் செயல்பாடு, ஆய்வறிக்கை வெளியீடு, காப்புரிமை மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளின் தரம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆண்டு செலவினங்களும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்களில் பெண்கள் பங்களிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது.

எஸ்டிஐ வளர்ச்சியை அதிகரிக்க இந்திய அறிவியல் மற்றும் பொருளாதாரச் சூழலுடன், வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளையும் இணைக்க வேண்டும் என்பதை இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x