Last Updated : 09 Nov, 2020 03:11 AM

 

Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

தூசிப் புயல்களின் தாக்கத்தால் வளிமண்டலத்தை வேகமாக இழக்கும் செவ்வாய் கிரகம்: மங்கள்யான் ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை

தூசிப் புயல்களின் தாக்கத்தால், செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தை வேகமாக இழந்து வருவது மங்கள்யான் விண்கலத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, கடந்த 2014 செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை அடைந்தது. அதன்பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது. அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

மங்கள்யானில் மார்ஸ் எக்சோஸ்பெரிக் நியூட்ரல் காம்போசிஷன் அனலைசர் (எம்இஎன்சிஏ), மார்ஸ்கலர் கேமரா (எம்சிசி) உட்பட 5சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு, தண்ணீர், கனிமவளம், பருவநிலை, வளிமண்டலம், மேற்பரப்பு பகுதிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

இதற்கிடையே, மங்கள்யான் அனுப்பும் படங்கள், அறிவியல் தரவுகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. அவற்றை இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும், 25,800 தகவல் தொகுப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மங்கள்யானில் உள்ள எம்இஎன்சிஏ ஆய்வு சாதனம் 2017 முதல் 2019 வரை சேகரித்த தரவுகளை தொகுத்து இஸ்ரோ நவ.5-ம் தேதி வெளியிட்டது. அதன் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

எம்இஎன்சிஏ அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தை வேகமாக இழந்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல சூழலை ஆராய்வதுதான் மங்கள்யானில் உள்ள எம்இஎன்சிஏ சாதனத்தின் முக்கிய பணி ஆகும்.கடந்த 5 ஆண்டுகளாக அது அனுப்பிய தகவல்களை பார்க்கும்போது, செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல இழப்பு (Loss of Atmosphere) துரிதமடைந்து வருவது தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக, கோள்களை சுற்றிபடர்ந்துள்ள வளிமண்டலம் பெரும்பாலும் வாயு மூலக்கூறுகள், மிகசிறிய அளவிலான தூசி, துகள்களால் நிரம்பியிருக்கும். புறக்காரணிகளால் வளிமண்டல வெப்பநிலை உயரும்போது, அதில் உள்ளவாயுக்கள் வெளியேறத் தொடங்கும். இதனால், கிரகம் படிப்படியாக தனது வளிமண்டலத்தை இழக்கத்தொடங்கும். சூரியக் கதிர்கள் நேரடியாக கிரகத்தை வந்தடையும். இவை கோளின் தட்பவெப்பநிலைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, பல பாதிப்புகளை உருவாக்கும். அதன்விளைவாக கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துவிடும்.

சூரியக் குடும்பத்தில் உள்ளஅனைத்து கோள்களும் வெப்பநிலை உயர்வு போன்ற பல்வேறுமாற்றங்களால் தனது வளிமண்டலங்களை இழந்துவருகின்றன. ஒவ்வொரு கோளின் அளவு மற்றும் மேல்வளிமண்டல வெப்பநிலையை பொறுத்து அந்த இழப்பின் அளவுஅமையும். பூமியை பொறுத்தவரை, மிக குறைந்த அளவே வளிமண்டல இழப்பு நிகழ்கிறது.

அதேநேரம், பூமி போலவே உள்ள செவ்வாய் கிரகத்தில் வளிமண்டல இழப்பு தற்போது வேகமாகநிகழ்கிறது. அங்கு அதிக அளவில்உருவாகும் தூசிப் புயல்களின் தாக்கம் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. தவிர, செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம் தொடர்ந்துவெப்பமடைந்து படிப்படியாக விரிவடைந்து வருகிறது. இதுவும்வளிமண்டல இழப்புக்கு மேலும்வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறது.

பூமியை ஒப்பிடும்போது செவ்வாயின் வளிமண்டலம் மெல்லியதாக, சிறிதாக இருக்கிறது. இதனால்புறக்காரணிகளால் எளிதாக பாதிப்படைகிறது. மறுபுறம், வளிமண்டல இழப்பால் அந்த கோளின் சராசரி வெப்பநிலையும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள தட்பவெப்பநிலைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தெரிகிறது.

செவ்வாயின் வளிமண்டல இழப்பு உட்பட பிற அம்சங்களை மங்கள்யான் மூலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இதன்மூலம் மங்கள்யான்-2 போன்ற நம் எதிர்கால திட்டங்களையும், விண்வெளி வீரர்களுக்கான ஆடை தயாரிப்பையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x