Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
காஷ்மீரில் நில சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதால் அங்குள்ள மக்களின் உரிமைகள் பாதிக்காது. காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, நில சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி காஷ்மீரில் நாடு முழுவதும் உள்ள இந்தியக்குடிமக்கள் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்க முடியும். ஆனால், நில சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதால் அங்குள்ள மக்களின் உரிமைகள் பாதிக்காது.
யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளவோ ஆக்கிரமிக்கவோ முடியாது. தனது சொத்தை விற்பதா வேண்டாமா என்று உரிமையாளர் முடிவு செய்யலாம். உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அவரது சொத்தை யாரும் கைப்பற்றவோ வாங்கவோ முடியாது. புதிய நில சட்டத் திருத்தத்தால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை. காஷ்மீர் மாநில தலைவர்கள் என்று அழைக்கப்படும் ஒரு சிலர் தாங்கள் காஷ்மீரில் மிகவும் குறைந்த விலைக்கு சொத்து வாங்க முடியாதே என்பதால் மக்களின் உரிமை பறிபோவதாகக் கூறி மக்களை குழப்பி பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT