Last Updated : 08 Nov, 2020 05:25 PM

 

Published : 08 Nov 2020 05:25 PM
Last Updated : 08 Nov 2020 05:25 PM

40 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு; ம.பி.யில் ஆசிரம இடிப்பைத் தடுக்கவந்த கம்ப்யூட்டர் பாபா சாமியார் கைது

ம.பி.யில் 40 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஆசிரமத்தை அம்மாநில அரசு இடித்துத் தரைமட்டமாக்கியது. தடுக்கவந்த கம்ப்யூட்டர் பாபா சாமியார் இன்று கைது செய்யப்பட்டார்.

'கம்ப்யூட்டர் பாபா' என்று பிரபலமாக அறியப்படும் ஆன்மிகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாம்தேவ் தியாகி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்தவர்.

நாம்தேவ் தியாகி ஓர் இந்து சந்நியாசி ஆவார். ஜனவரி 2015இல் இந்து மதத்தைக் கேலி செய்வதாகக் கூறி 'பி.கே' திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கினார். 2018இல் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இவர் மாநில அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் அமைச்சரவையிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

பின்னர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, நதிகளைக் காக்கும் அரசாங்க அறக்கட்டளை ஒன்றுக்கு கம்ப்யூட்டர் பாபாவைத் தலைவராக நியமித்தது.

அரசியல் உறவுகளுக்குப் பெயர் பெற்ற கம்ப்யூட்டர் பாபா, மத்தியப் பிரதேசத்தின் ஜம்புடி ஹாப்சி கிராமத்தில் அரசு நிலத்தில் ஆசிரமம் கட்டினார். அந்த ஆசிரமம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதால் இன்று காலையில் இடிக்கப்பட்டது.

அத்துமீறிக் கட்டப்பட்ட ஆசிரமத்தை அகற்ற இந்தூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு கம்ப்யூட்டர் பாபா எதிர்ப்புத் தெரிவித்தார் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது அதைத் தடுக்கவந்த பாபா, அவரது ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அஜய்தேவ் சர்மா கூறியதாவது:

''பாபா இங்கு 40 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து ஒரு ஆசிரமத்தையும் கொட்டகையையும் கட்டியிருந்தார். அத்துமீறல்களை அகற்ற, கம்ப்யூட்டர் பாபாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசு நிலத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் அதைப் பின்பற்றவில்லை.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது ஆசிரமம் இன்று காலை இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. இடிக்கும் பணியைத் தடுக்க முயன்றதால் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அஜய்தேவ் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x