Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

ஊராட்சி தலைவர், உறுப்பினரை திரும்ப பெறும் மசோதா: ஹரியாணா பேரவையில் நிறைவேறியது

சண்டிகர்

ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் சரியாக செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள மக்களுக்கு உரிமை வழங்கும் மசோதா ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

ஹரியாணா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று முன்தினம் 2020-ம் ஆண்டுக்கான ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் (இரண்டாவது திருத்தம்) மசோதாவை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தாக்கல் செய்தார்.

கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் மாவட்ட அளவிலான ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் சரியாக செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை மக்களுக்கு இந்த மசோதா வழங்குகிறது.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 8 சதவீத இடஒதுக்கீடும் வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தலைவரையோ அல்லது ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் உறுப்பினர்களையோ அவர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பேமக்கள் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பொறுப்புடைமையை அதிகரிப்பதே இந்த திருத்தத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x