Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

திருப்பதியில் 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை

ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வரும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமலை ஏழுமலையானை இலவச தரிசனம்மூலம் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்து வந்தனர். கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில்பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், ரூ.300ஆன்லைன் தரிசனம், இலவசதரிசனம் மட்டுமே அனுமதிக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து, படிப்படியாக விஐபி பிரேக் தரிசனம், ஆன்லைன் கல்யாண உற்சவம், வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை வழங்கப்பட்டது. இதனிடையே, ஆந்திராவில் கரோனா பரவல் தீவிரமானதால் இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், சாமன்ய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாமல் மிகவும் வருத்தப்பட்டனர்.

இந்நிலையில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியதையடுத்து, கடந்த 10 நாட்களாக சாமான்ய பக்தர்கள் இலவச தரிசனம் மூலம்சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, தினமும் 5 ஆயிரம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தற்போது திருப்பதி ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த டிக்கெட்களை பெற வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசனத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் ஆகும் என்பதால், அதற்கு ஏற்ப பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு வரவேண்டும் என்றும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x