

தேசிய சணல் வாரியம் (என்ஜேபி) காரக்பூர் ஐஐடியுடன் இணைந்து சணலைப் பயன்படுத்தி சானிடரி நாப்கின்களை கண்டுபிடித்துள்ளது. இவை, கருப்பைநோய் புற்றுநோயைத் தடுக்க உதவிகரமாக இருக்கும்.
தேசிய சணல் வாரிய செயலாளர் அரவிந்த் குமார் கூறும்போது, “பரிசோதனை முயற்சிகளைச் செய்து விட்டோம். ஆரம்பகட்ட தயாரிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்துவருகிறோம்” என்றார். தேசிய சணல் வாரியம் இந்த ஆய்வுக்கான நிதியுதவியை அளித்தது. ஐஐடி காரக்பூர் விஞ்ஞானி பி. அதிகாரி இந்த திட்ட ஆய்வை மேற்கொண்டார். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்திய சுகாதாரம்தான் கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே, இப்புதிய கண்டுபிடிப்பு பெண்களின் சுகாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நசிந்து வரும் சணல் தொழிலுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு புத்துயிரூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சணலிலிருந்து செல்லுலோஸ் பிரித்தெடுக்கப்பட்டு, அதன் தரம் மேம்படுத்தப்பட்டு, மிகை உறிஞ்சு திறன்கொண்ட பாலிமருடன் இணைத்து இந்த நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமாக, இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி அல்லது மர செல்லுலோஸ்களைப் பயன்படுத்தி சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன.