Published : 24 Oct 2015 03:41 PM
Last Updated : 24 Oct 2015 03:41 PM
'மோடி ஆக்சிஜனில் வாழ்ந்து கொண்டிருக்கிறது பாஜக; மக்கள் மத்தியில் மோடியின் பிரபலம் குறையும் வரைக்கும் அந்த வாழ்வு நீடிக்கும்' என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "பாஜக மோடி ஆக்சிஜனில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் மோடியின் பிரபலம் குறையும் வரைக்கும் அந்த வாழ்வு நீடிக்கும். ஆனால், சிவசேனா கட்சி அதன் சிந்தனைகளால், தேசபக்தியால், போராட்டங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சிவசேனாவின் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இந்துத்துவா, தேசபக்தி, மகாராஷ்டிராவின் அடையாளத்தைப் பேணுவது என எதிலும் சேனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
எந்தச் சூழலில் மாற்றியும் கொள்ளாது. நாட்டின் விரோதிகளுக்கு எதிராகவே சிவசேனா போர்க்கொடி உயர்த்துகிறது.
தேர்தலை எதிர்கொள்ள சிவசேனா தயாராக இருக்கிறது. எங்களுடன் ஒருமித்த கருத்துடையவர்கள் இணைந்து கொள்ளலாம் அல்லது நாங்கள் தனியாகவே எதிர்கொள்வோம்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக்கொள்ளவும் அளவுக்கு தலைவர் யாரும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரோ முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை. எனவே, எதிர்காலம் சிவசேனாவின் கைகளில் வசப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT