Published : 06 Nov 2020 05:18 PM
Last Updated : 06 Nov 2020 05:18 PM

12 மணிநேர சாலைப் பயணம் இனி 4 மணி நேர நீர் வழிப் பயணம்; குஜராத்தில் படகு போக்குவரத்து திட்டம்: 8-ம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கோப்புப் படம்

புதுடெல்லி

ஹசிராவில் ரோ-பாக்ஸ் முனையத்தை வரும் நவம்பர் எட்டாம் தேதியன்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்து, ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே ரோ-பாக்ஸ் படகு சேவையையும் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

நீர்வழிகளை சரியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு அவற்றை ஒருங்கிணைக்கும் பிரதமரின் நோக்கத்தை அடைவதற்கான பெரிய நடவடிக்கையாக இது இருக்கும். இந்த சேவையை பயன்படுத்தும் உள்ளூர் மக்களிடமும் பிரதமர் உரையாடவிருக்கிறார். மத்திய கப்பல் இணை அமைச்சர் மற்றும் குஜராத் முதல்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

100 மீட்டர்கள் நீளம் மற்றும் 100 மீட்டர்கள் அகலத்தோடு ரோ-பாக்ஸ் முனையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவு சுமார் ரூ 25 கோடியாகும். நிர்வாக அலுவலகக் கட்டிடம், வாகனங்களை நிறுத்துமிடம், துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று அடுக்குகள் கொண்ட ரோ-பாக்ஸ் கலன் 'வாயேஜ் சிம்பொனி', 2500-2700 மெட்ரிக் டன்கள் கொள்ளளவுடனும், 12000 முதல் 15000 ஜிகா டன்கள் இடப்பெயர்வுத் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. (ஒவ்வொன்றும் 50 மெட்ரிக் டன்கள் எடையுடைய) 30 வண்டிகள் சரக்கை முதல் அடுக்கிலும், 100 பயணிகள் கார்களை மேல் அடுக்கிலும், 500 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் மற்றும் உபசரிப்புப் பணியாளர்களை பயணிகள் அடுக்கிலும் இது கொள்ளும்.

ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையேயான ரோ-பாக்ஸ் படகு சேவையினால் பல்வேறு பலன்கள் ஏற்படும். தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதியின் நுழைவுவாயிலாக இது செயல்படும். கோகா மற்றும் ஹசிராவுக்கிடையேயான தொலைவை 370 கிலோமீட்டர்களில் இருந்து 90 கிலோமீட்டர்களாக இது குறைக்கும். பத்து முதல் 12 மணி நேரமாக இருந்து சுமார் நான்கு மணி நேரமாக பயண நேரம் குறைவதால், (ஒரு நாளைக்கு சுமார் 9000 லிட்டர்கள்) எரிபொருள் மிச்சமாகும்.

அதோடு படகுகளின் பராமரிப்பு செலவும் பெருமளவு குறையும். ஒரு நாளைக்கு மூன்று தடவை பயணம் மேற்கொள்ளும் இந்த சேவையினால், வருடத்துக்கு சுமார் 5 லட்சம் பயணிகள், 80,000 வாகனங்கள், 50,000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 30,000 டிரக்குகளை எடுத்து செல்ல முடியும். சரக்கு வாகன ஓட்டுநர்களின் களைப்பு இதன் மூலம் குறைந்து, அவர்களின் வருமானம் உயர்ந்து, அதிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைப்பதன் மூலம் அதிக வருமானமும் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 24 மெட்ரிக் டன்கள் என்னும் அளவுக்கும், ஒரு வருடத்துக்கு சுமார் 8653 மெட்ரி டன்கள் என்னும் அளவுக்கும் கரியமில வெளிப்பட்டை குறைக்க இது வழிவகுக்கும். சவுராஷ்டிராப் பகுதியை எளிதில் அணுகும் வசதியை ஏற்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும். படகு சேவைகளின் மூலமாக, சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பிராந்தியத்தில் உள்ள துறைமுகத் துறை, மரச் சாமான்கள் தொழில் மற்றும் உர நிறுவனங்களுக்கு இதனால் மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும்.

குறிப்பாக போர்பந்தர், சோம்நாத், துவாரகா மற்றும் பலிதானா ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா ஆகியவை நல்ல வளர்ச்சி அடையும். இணைப்பு வசதிகள் மேம்படுவதால், கிர்ரில் உள்ள ஆசிய சிங்கங்களின் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயத்துக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x