

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
''நேற்று இரவு தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
பாம்பூரின் லல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதைக் கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அங்கு தேடுதல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கையில், பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனால் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கை நடைபெற்ற பகுதியைப் பாதுகாப்புப் படையினர் இரவு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்தத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர் போன்றவை ஆராயப்பட்டு வருகின்றன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது''.
இவ்வாறு காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.