Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு மீண்டும் வருவதற்கு ஏற்பாடு: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி

இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு திரும்புவதற்கு வசதிகளை செய்துதர வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். தற்போது சர்வதேச அளவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால், அவர்கள் மீண்டும் அரபு நாடுகளுக்கு சென்று பணிபுரிய தயாராகி விட்டனர்.

இதற்கு ஏதுவாக, அவர்கள் அரபு நாடுகளுக்கு திரும்புவதற்கான வசதியை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்படுத்தி தர வேண்டும். உதாரணமாக, இந்தியர்கள் அரபு நாடுகளுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, இந்தியாவில் இருந்து அதிகளவில் விமானங்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவும் முழு ஒத்துழைப்பு வழங்கும்.இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு, ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x