Published : 04 Nov 2020 01:05 PM
Last Updated : 04 Nov 2020 01:05 PM

கங்கா உத்சவம் இன்று நிறைவு: ஜல்சக்தி அமைச்சர் பங்கேற்பு

தேசிய ஆறுகள் தினமான இன்று கங்கா உத்சவம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

கங்கா உத்சவம் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் 2வது நாளாக நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் ‘ரக் ரக் மேன் கங்கா’ டி.வி நிகழச்சி தொடர்பாக இமயமலை பகுதியில் தனது பயண அனுபவங்களை, கங்கை கீதம் இயக்கிய திருச்சூர் சகோதரர்களிடம், ராஜீவ் கந்தேல்வல் பகிர்ந்து கொண்டார்.

தொழில் ரீதியாக தொடங்கிய பயணம், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது’’ என ரிச்சா அனிருத்திடம் பேசிய ராஜீவ் கந்தேல்வல் கூறினார்.

‘ரக் ரக் மேன் கங்கா’ நிகழ்ச்சி தூர்தர்ஷனில் 3 மாதம் காலம் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இதை நாடு முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் பேர் பார்த்தனர். கங்கை நதியின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை, நாட்டு மக்களுடன் மீண்டும் இணைப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

கங்கா உத்சவம் 2ம் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஜல் சக்தி துறை இணையமைச்சர் ரத்தன் லால் கடாரியா தொடங்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ‘‘கங்கா உத்சவம் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே, ஆயிரக்கணக்கான மக்கள், நாடு முழுவதும் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் முகநூல் மற்றம் இதர தளங்கள் வாயிலாக இந்த விழாவில் இணைந்துள்ளனர்’’ என குறிப்பிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆறுகளை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இளைஞர்களும் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் ரத்தன் லால் கடாரியா தெரிவித்தார். உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், ‘‘கங்கா உத்சவ் நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு தகவல்களை பகிர்ந்துகொள்வர் என நம்புகிறேன்’’ என்றார்.

கங்கா உத்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ கங்கை புதுப்பிப்பு திட்டத்தில் இந்த தலைமுறையும் இணையட்டும். அப்போதுதான் எதிர்கால தலைமுறையும், கங்கை தாயின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் போல் அறிவர்’’ என கூறியுள்ளார்.

கங்கை உத்சவத்தின் 2ம் நாள் நிகழ்ச்சி, நீரஜ் ஆர்யாவின் ‘கபிர் கபே’ இசை நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் கபீரின் பாடல்களை தற்போதைய நடைமுறையில் நீரஜ் ஆர்யா பாடினார். மினி கங்கா போட்டி நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தேசிய ஆறுகள் தினமான இன்று இந்நிகழ்ச்சி ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் முன்னிலையில் நிறைவு பெறுகிறது. பல முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியிடப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியை நேரடியாக காணுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x