

திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க விரைவில் கர்நாடக அரசு சட்டம் கொண்டுவரும் என்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கில் பிறப்பில் முஸ்லிமாக இருந்த ஒரு பெண் மதம் மாறி இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி இந்து மதத்துக்கு மாறிய எந்த பெண், ஜூலை 31-ம் தேதி திருமணம் செய்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக்கோரி இருவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, “ திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார், அதன்பின் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் நூர்ஜஹான் எனும் அஞ்சலி மிஸ்ரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் மேற்கோள்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டத்தி்ல பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், பெருமையையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும். திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன். மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச அரசைப் பின்பற்றி தற்போது கர்நாடக அமைச்சரும் சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி. ரவி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மாநிலத்தின் பெண்களின் மரியாதை குலைக்கும் வகையில் ஜிகாதிகள் செய்யும்போது, அதைப் பார்த்து அரசு மவுனமாக இருக்காது. யாரேனும் இதுபோன்ற மதம்மாற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விரைவில் வழங்கப்படும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்ததையடுத்து, மத்தியப்பிரதேச அரசும், ஹரியாணா அரசும் அதேபோன்று சட்டம் இயற்றப்போவதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.