கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் தூக்கிட்டுத் தற்கொலை: டியூஷன் படிக்க வந்த மாணவர்கள் அதிர்ச்சி 

கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் தூக்கிட்டுத் தற்கொலை: டியூஷன் படிக்க வந்த மாணவர்கள் அதிர்ச்சி 
Updated on
1 min read

கடன் தொல்லை தாங்காமல் மனமுடைந்து அசாமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள துல்சிபீல் என்ற இடத்தில் நடந்துள்ளது.

நிர்மல் பால், மனைவி மல்லிகா பால், மகள்கள் பூஜா, நேஹா, ஸ்னேஹா ஆகியோரது உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

மகள்களில் பூஜா தனியார் பள்ளி ஆசிரியை, மற்றவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

நிர்மல் கியாஸ் ஏஜென்சியில் பணியாற்றி வந்தார். இதுதவிர மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வந்துள்ளனர். இந்த நிலையில், டியூசன் படிக்கும் மாணவர்கள் இவர்களது வீட்டுக்கு வந்து மணிக்கணக்கில் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் எந்த பதிலும் வரவில்லை.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபொழுது, 5 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த குடும்பத்தினர் சிலரிடம் லட்சக்கணக்கான ரூபாய்கள் கடன் வாங்கியுள்ளனர், திருப்பித்தர முடியாமல் போராடியுள்ளனர், என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் அனைவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரங்கள் உள்ளனவா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணக் குறிப்பு எதுவும் உள்ளதா என்று போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in