Published : 02 Nov 2020 09:30 PM
Last Updated : 02 Nov 2020 09:30 PM

வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்; அறக்கட்டளைகள், தன்னார்வ நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி 

ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்துவது குறித்து அறக்கட்டளைகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகமைகள் உள்ளிட்ட 50 துறையினரிடம் தேசிய ஜல் சக்தி இயக்கம் ஆலோசனை நடத்தியது.

மத்திய அரசின் முக்கிய திட்டமான ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சியாக மட்டுமல்லாமல் இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாகவும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை அடுத்து தேசிய ஜல் சக்தி இயக்கத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐக்கிய நாடுகளின் முகமைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 50 அமைப்புகளுடன் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்து காணொலி வாயிலாக ஆலோசிக்கப்பட்டது.

தேசிய ஜல்சக்தி இயக்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் செயலாளர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்பும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மக்களிடம் நேரடியாகச் சென்று இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அருகி வரும் நீர் வளங்கள், நீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்த விஷயங்கள் கிராமப்புறங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முழுமையான தீர்வுகளைக் காணும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சவாலான இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, பாதுகாப்பான குடிநீரை அனைவருக்கும் வழங்குவதற்கு அரசுடன் தனியார் துறையினர், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை இணைந்து செயல்படுவது அவசியமாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x