Published : 01 Nov 2020 04:22 PM
Last Updated : 01 Nov 2020 04:22 PM

கோவிட்-19: சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3 நாளாக 6 லட்சத்திற்கும் கீழ் சரிவு


கோவிட்-19 நோய் தொற்றால் நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது இந்தியாவில் 5,70,458 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இந்த நோயால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 6.97 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில அரசின் வியூகத்தின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான பரிசோதனைகள், உரிய நேரத்தில் நோய் குறித்த கண்காணிப்பு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வசதிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தில் 5930 ஆக பதிவாகியுள்ளது. உலக அளவில் பாதிப்பு குறைந்துள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த நோயில் இருந்து மொத்தம் 74,91,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்குமான இடைவெளி 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது (69,21,055).

கடந்த 24 மணிநேரத்தில் 58,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 46,963 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ இவர்களில் 77 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 470 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x