Published : 01 Nov 2020 11:16 AM
Last Updated : 01 Nov 2020 11:16 AM

மக்களின் நலனுக்கான கொள்கைகளை வகுத்தாலும் செயல்படுத்துவதில் கவனம் தேவை: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

கோப்புப் படம்

புதுடெல்லி

பொதுமக்களின் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ய செயலாக்கம் மற்றும் விநியோக அமைப்புக்கு புத்தாக்கம் அளித்து முறைப்படுத்துவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் 66-வது வருடாந்திர பொதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய நாயுடு, மக்களின் நலனுக்கான கொள்கைகளை அரசு வகுத்தாலும், அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்துவது அவசியம் என்றார்.

நல்ல ஆளுகை என்பது அடிமட்டம் வரை சென்றடைந்து வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக வேண்டும் எனக் கூறிய குடியரசு துணைத் தலைவர், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக யுக்தி சார்ந்த எச்சரிக்கையுடனும், சரியான மற்றும் முறையான நடவடிக்கைகளுடனும் இந்தியா போராடி வருவதாக தெரிவித்தார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் நூலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவ சிலையை அவரது பிறந்த நாளான நேற்று நாயுடு திறந்து வைத்தார்.

பட்டேலுக்கு புகழாரம் சூட்டிய நாயுடு, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல் ஒரு உண்மையான கர்மயோகி என்றும், தவிர்க்கமுடியாத மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாகி என்றும் கூறினார்.

சர்தார் பட்டேலின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களில் இருந்து ஊக்கம் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

நாட்டின் ஆளுகை சீர்திருத்தங்களில் புதிய அலைக்கு ஊக்கமளிக்கும் செயல்திறன் மிக்க அமைப்பாக இந்திய பொது நிர்வாக நிறுவனத்தை மாற்ற அவர் அழைப்பு விடுத்தார்.

நிர்வாகிகள் கற்றுக் கொள்ள ஏதுவாக நல்ல செயல்களின் தொகுப்பை உருவாக்குமாறு இந்திய பொது நிர்வாக நிறுவனத்தை நாயுடு கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x