Published : 31 Oct 2020 05:07 PM
Last Updated : 31 Oct 2020 05:07 PM

கரோனா தொற்று: இறப்பு விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்தது

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது.

உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான கூட்டு முயற்சியின் விளைவாக இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே சரிந்துள்ளது. தொடர்ந்த சரிவின் காரணமாக இன்று உயிரிழந்தோரின் விகிதம் 1.49 சதவீதம் ஆக இருக்கிறது. இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை என்பது 88 பேர் ஆக உள்ளது.

மத்திய அரசு தலைமையிலான பரிசோதனை, கண்டுபிடித்தல், கண்காணித்தல், சிகிச்சை என்ற உத்தி, தீவிர பரிசோதனை மற்றும் தரப்படுத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகள் ஆகியவற்றை மாநில/யூனியன் பிரதேச அரசுகள் தீவிரமாக அமல்படுத்துவதன் பலனாக, சிறப்பான பலன்களை அடைய முடிந்துள்ளது.

முன்கூட்டியே கண்டறிதல், முறையாக தனிமைப்படுத்துதல், சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ மேலாண்மை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் காரணமாக இந்தியாவின் கொவிட் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்த‍ அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இது நிலையான மற்றும் உறுதியான சரிவாகும்.

கொவிட் மேலாண்மை மற்றும் சிகிச்சை அளித்தல் கொள்கையின் ஒரு பகுதியாக, கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் மருத்துவ மேலாண்மையில் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் திறன்களை கட்டமைக்கும் ஒரு தனித்துவமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாரத்தில் இருமுறை, அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இ-ஐசியூ தொடங்கப்பட்டுள்ளது. மாநில மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக துறைரீதியான வல்லுநர்களைக் கொண்டு டெலி மற்றும் காணொலிக் காட்சி வழியே மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த ஆலோசனை வகுப்புகள் 2020 ஜூலை 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் பலனாக, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு விகிதம் என்பது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.

65% உயிரிழப்புகள் 5 மாநிலங்களில் இருந்து மட்டும் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவாக 36% மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மொத்த இறப்புகளில் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் 85% உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்த மரணங்கள் 100-க்கு கீழே உள்ளன. 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1000-க்கு கீழே உயிரிழப்புகள் உள்ளன. 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில்10,000-க்கும் கீழே உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 59,454 பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக தொற்றுப் பதிவானவர்கள் எண்ணிக்கை 48,268 ஆக உள்ளது. மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 74 லட்சத்தைத் தாண்டி உள்ளது (74,32,829). ஒரு நாளில் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, தேசிய குணம் அடைந்தோரின் விகிதத்தில் தொடர்ந்து உயர்வை ஏற்படுத்துகிறது. இப்போது இது 91.34% ஆக உள்ளது.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுகிறது. இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் வெறும் 7.16% ஆக இருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 5,82,649 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.

10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக குணம் அடைந்தோரின் விகிதம் 79% ஆக இருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு நாளில் அதிக அளவில் குணம் பெற்றோர் எண்ணிக்கை 8,000-க்கும் அதிகமாக இருக்கிறது. கேரளாவில் ஒரே நாளில் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 48,268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மட்டும் 78% பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இங்கு தலா 6000-த்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாநிலங்களுக்கு அடுத்து டெல்லியில் 5000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 83% மரணங்கள் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக உயிரிந்தோரின் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக (127) இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x