Published : 31 Oct 2020 04:32 PM
Last Updated : 31 Oct 2020 04:32 PM

நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஊக்கம் தருவது என்ற மந்திரத்தைப் பின்பற்றுமாறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்திய சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். குஜராத் மாநிலம் கேவடியாவில் இருந்து முசோரியில் இருக்கும்
லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவர் உரையாடினார்.

2019-இல் தொடங்கப்பட்ட ஆரம்பம் என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.
பயிற்சி அதிகாரிகள் முன்வைத்த கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு பேசிய பிரதமர், “நாட்டின் குடிமக்களுக்கு சேவை செய்வது தான் சிவில் சர்வீஸ் பணியில் இருப்பவர்களின் உயர்ந்தபட்சக் கடமை'' என்ற சர்தார் வல்லபாய் பட்டேலின் தத்துவத்தை பயிற்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசத்தின் நலன் கருதி இளம் அதிகாரிகள் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று மோடி கூறினார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை அவர்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்தத் துறையாக இருந்தாலும், எந்தப் பகுதியில் பணிபுரிபவராக இருந்தாலும், சாமானிய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதாக மட்டுமே சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முடிவுகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“ஸ்டீல் பிரேம்” போன்ற வரையறைக்குள் உள்ள செயல்பாடுகள் அன்றாட விவகாரங்களைக் கையாள்வதாக மட்டும் அல்லாமல், தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நெருக்கடியான சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும் என்றார் அவர்.

பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட அவர், புதிய லட்சியங்களை எட்டுவதற்கு, நாட்டில் புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய வழிமுறைகளுக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறினார்.

கடந்த காலத்தைப் போல அல்லாமல், மனிதவளத் துறையில் நவீன அணுகுமுறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த 2 - 3 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஆரம்பம்’ என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டம் வெறும் தொடக்கமாக மட்டும் அல்லாமல், புதிய பாரம்பரியத்தின் அடையாளச் சின்னமாகவும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மிஷன் கர்மயோகி என்ற பெயரில் சிவில் சர்வீஸ் பயிற்சியில் சமீபத்தில் செய்துள்ள சீர்திருத்தங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த அதிகாரிகள் புதுமை சிந்தனைகள் மற்றும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியாக இது இருக்கும் என்று கூறினார்.

மேலிருந்து-கீழாக என்ற அணுமுறையில் அரசு செயல்படாது என்று பிரதமர் குறிப்பிட்டார். யாருக்காக கொள்கைகள் உருவாக்கப் படுகிறதோ அந்த மக்களின் பங்கேற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அரசை இயக்கும் உண்மையான சக்தியாக மக்கள் தான் இருக்கிறார்கள் என்றார் அவர்.

அரசின் குறைந்தபட்ச தலையீட்டில், அதிகபட்ச நிர்வாகச் சிறப்பை உருவாக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதாக அனைத்து அதிகாரிகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். குடிமக்களின் வாழ்வில் அரசின் தலையீடுகள் குறைவாக இருக்க வேண்டும், சாமானிய மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற மந்திரத்தை சிவில் சர்வீஸ் பயிற்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x