Published : 30 Oct 2020 10:07 PM
Last Updated : 30 Oct 2020 10:07 PM

வல்லபாய் படேல் சிலை அருகே படகு சவாரி; சர்தார் சரோவர் அணையில் ஜொலிக்கும் மின்விளக்குகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்  

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வனப் பயணம் மற்றும் பிரம்மாண்ட பறவைகள் கூண்டு:

சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்ட பறவைகள் கூண்டு பற்றி பிரதமர் கூறுகையில், ‘‘ இந்த உயரமான பறவைகள் கூண்டு, பறவைகளை ரசிப்பர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். கெவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்’’ என்றார்.

மிக நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா, 375 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. 29 மீட்டர் முதல் 180 மீட்டர் உயரம் வரை 7 விதமான இடங்கள் இங்கு உள்ளன. இங்கு 1100 பறவைகள், விலங்குகள் மற்றும் 5 லட்சம் தாவரங்கள் உள்ளன. இது மிகவும் விரைவாக உருவாக்கப்பட்ட உயிரியல் பூங்கா. இதில் இரண்டு விதமான பறவை கூண்டுகள் உள்ளன.

ஒன்றில் உள்நாட்டு பறவைகளும், மற்றொன்றில் கவர்ச்சிகரமான பறவைகளும் உள்ளன. இது பறவைகளுக்கான உலகின் மிகப் பெரிய கூண்டு. இதைச் சுற்றிலும் செல்ல பிராணிகளின் மண்டலம் உள்ளது. இங்குள்ள பஞ்சவர்ண கிளி, அழகு கிளிகள், முயல்கள், அழகு எலிகள் ஆகியவற்றை தொட்டு பார்த்து மகிழ்ச்சியடையலாம்.

ஒற்றுமை படகு சேவை:

ஒற்றுமை படகு சவாரி மூலம் ஒருவர், ஷ்ரஸ்தா பாரத் பவனிலிருந்து, ஒற்றுமை சிலை அமைந்துள்ள பகுதியை 6 கி.மீ தூரத்துக்கு 40 நிமிடங்கள் சுற்றி பார்க்க முடியும். இதற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள நவீன படகில் ஒரே நேரத்தில் 200 பேர் பயணம் செய்யலாம். இந்த படகு சேவை செயல்பாட்டுக்காக புதிய கோரா பாலம் கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காகவே, படகு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.

— ANI (@ANI) October 30, 2020

சர்தார் சரோவர் அணையில் சக்திவாய்ந்த மின் விளக்குகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஐ.நா.வின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை இணையதளம், மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டத்தில், கெவாடியா கைப்பேசி செயலி ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அழகு கற்றாழை செடிகள் தோட்டத்தையும், பிரதமர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டம்

இது 3.61 ஏக்கரில் அமைந்திருக்கும் தனிச்சிறப்பான பொழுது போக்கு பூங்கா. இதில் மின் விளக்குகளால் ஒளிரும் கண்ணாடி மாயத் தோற்றங்கள், உருவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இரவு சுற்றுலா அனுபவத்தை ரசிக்க, அனைத்து சுற்றுலா பயணிகளையும் பிரதமர் வரவேற்கவுள்ளார்.

கற்றாழை தோட்டம்

இந்த பிரம்மாண்ட பசுமை தோட்டத்தில், 17 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 450 தேசிய மற்றும் சர்வதேச வகைகள் உள்ளன. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில், 1.9 லட்சம் கற்றாழை செடிகள் உட்பட 6 லட்சம் தாவரங்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x